அப்பா குடிப்பார் என்று
அப்போது எனக்கெப்படித் தெரிந்திருக்க முடியும்?
அந்த வார்த்தையே அறிந்திராத வயசு எனக்கு....
* * * *
அம்மா பத்திரகாளியாய்
என்னையும் அக்காவையும்
அர்த்தம் புரியாமல் அழுகின்ற மழலையின் தெய்வீகத் துணையின் பொருட்டும்
கரங்களில் பற்றிக்கொண்டு
தட்டிற்று கதவை...
அம்மா நிஜமாகவே பத்திரகாளிதான்,
அது கை கட்டி வாய் பொத்து ~ என்றால் ஒருமணி உட்கார்ந்திருந்த
தினங்கள் உண்டு.
அப்போதெல்லாம் அப்பாவின் மத்தியஸ்தம்
அருகாமைத்திரையரங்கில் அடுத்த
சினிமாவாயும் பாப்கார்னாயும் வெளிப்படும்....
* * * *
அப்பா இருந்த உறக்க அறைக்கதவு இடிபட்டது...
நீ என் தம்பியாடா? குடி கெடுக்க வந்தவனே...
....நீங்க எக்கேடும் கெட்டுப்போங்க,
நான் என் பிள்ளைகளோட நல்லதங்காளாய் போறேன்...
~எனக்கு அப்போதே நல்ல தங்காள் கதை தெரியும்,
என்னைக் கிணற்றின் இருட்டும் கெட்ட நீரின் பலாத்காரமும் மருட்டின.
அழுதே அன்றைக்கு உயிரை விட்டிருப்பேன்....
அப்பாவாச்சும் வெளியே வந்து விடாமல் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும்
என் அழுகைக்கு ஒரு அர்த்தமிருப்பதுமட்டும் அம்மாவுக்குத்
தெரிந்தால்....?
* * * *
கதவு திறந்து அப்பா தெரிந்தார்
அப்பாவின் காலிடுக்கில் அறையின் மையத்தில் மாமாவும்
அந்த டீப்பாயின் மேலே பாட்டிலொன்றும் தெரிந்தன.
அம்மா ரொம்ப மோசம்...
வாட்டர்பர்ஸ் காம்பெளண்டு அதுவே எனக்குத்தரும்,
அப்பா குடித்தால் தப்பா?
* * * *
அப்பாவின் மெளனம் அம்மாவைச் சீண்டிற்று,
சாவேன்... இதோ இதைக்குடித்து என் பிள்ளைகளோடு சாவேன்
~ என்று அதுவும் ஒரு பாட்டிலைக் காட்டிற்று...
* * * *
அப்பா வாய் திறந்து ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்,
சரி!
~ கதவடைத்து உள்ளே போனார்
* * * *
இந்தக்கவிதை சுதேசமித்திரனின் "அப்பா"
என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து நான் படித்து ரசித்தது.
Saturday, June 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
சுதேசமித்திரனின் கவிதைகளில் எனக்குப்பிடித்த ஒன்று.
Post a Comment